Thursday, August 30, 2007

முதன்முதலாய் அம்மாவுக்கு

கவிப்பேரரசு வைரமுத்துவை பற்றி எல்லோருக்கும் நன்றாக தெரிந்திருக்கும். அவருடைய கவிதைத் தொகுப்பில் இருந்து எனக்குப் பிடித்த கவிதை ஒன்று....

முதன்முதலாய் அம்மாவுக்கு



ஆயிரம்தான் கவிசொன்னேன்
அழகழகாய்ப் பொய் சொன்னேன்
பெத்தவளே ஓம்பெருமை
ஒத்தைவரி சொல்லலையே!




எழுதவோ படிக்கவோ
ஏலாத தாய்பத்தி
எழுதியென்ன லாபமென்று
எழுதாமல் போனேனோ?




பொன்னையாதேவன் பெற்ற
பொன்னே குலமகளே
என்னைப் புறந்தள்ள
இடுப்புவலி பொறுத்தவளே




வைரமுத்து பிறப்பான்னு
வயிற்றில்நீ சுமந்ததில்லை
வயிற்றில்நீ சுமந்தஒண்ணு
வைரமுத்து ஆயிடுச்சு




கண்ணுகாது மூக்கோடை
கறுப்பா ஒருபிண்டம்
இடப்பக்கம் கிடக்கையிலை
என்னென்ன நினைச்சிருப்ப?




கத்தி எடுப்பவனோ?
களவாடப் பிறந்தவனோ?
தரணியாள வந்திருக்கும்?
தாசில்தார் இவன்தானோ?




இந்த விபரங்கள்
ஏதொண்ணும் தெரியாமை
நெஞ்சூட்டி வளத்தஉன்னை
நினைச்சா அழுகைவரும




கதகதெண்ணு கழிக்கிண்டி
கழிக்குள்ளை குழிவெட்டி
கருப்பெட்டி நல்லெண்ணை
கலந்து தருவாயே




தொண்டையிலை அதுஇறங்கும்
சுகமான இளஞ்சூடு
மண்டையிலை இன்னும்
மசமசன்னு நிக்குதம்மா




கொத்தமல்லி வறுத்துவச்சுக்
குறுமொளகா ரெண்டுவச்சு
சீரகமும் சிறுமொளகும்
சேத்துவச்சு நீர்தெளிச்சு




கும்மி அரச்சு நீ
கொழகொழன்னு வழிக்கையிலே
அம்மி மணக்கும்
அடுத்ததெரு மணமணக்கும்




தித்திக்கச் சமைச்சாலும்
திட்டிகிட்டே சமைச்சாலும்
கத்தரிக்காய் நெய்வடியும்
கருவாடு தேனொழுகும்




கோழிக் கொழம்புமேல
குட்டிகுட்டியா மிதக்கும்
தேங்காய்ச் சில்லுக்கு
தேகமெல்லாம் எச்சிஊறும்




வறுமையில நாமபட்ட
வலிதாங்க மாட்டாம
பேனா எடுத்தேன்
பிரபஞ்சம் பிச்செறிஞ்சேன்!




பாசமுள்ள வேளையில
காசுபணம் கூடலையே!
காசுவந்த வேளையிலே
பாசம்வந்து சேரலையே!




கல்யாணம் நான் செஞ்சு
கதியத்து நிக்கையிலே
பெத்தஅப்பன் சென்னைவந்து
சொத்தெழுதிப் போனபின்னே




அஞ்சாறு வருசம்உன்
ஆசமொகம் பாக்காமப்
பிள்ளைமனம் பித்தாச்சே
பெத்தமனம் கல்லாச்சே




படிப்புப் படிச்சுக்கிடே
பணம் அனுப்பி வச்சமகன்
கைவிட மாட்டான்னு
க்டைசியில நம்பலையே!




பாசம் கண்ணீரு
பழையகதை எல்லாமே
வெறிச்சோடிப் போன
வேதாந்த மாயிருச்சே!




வைகையிலை ஊர்முழுக
வல்லாரும் சேர்ந்தொழுக
கைப்பிடியாக் கூட்டிவந்து
கரைசேத்து விட்டவளே




எனக்கொன்னு ஆனதுன்னா
உனககுவேறை பிள்ளையுண்டு
உனக்கொண்ணு ஆனதுன்னா
எனக்குவேறை தாயிருக்கா?



இந்த கவிதையை பாடகர் S.P.B தன் அழகான குரலில் உருக்கமாக பாடியுள்ளார். கவிதையை வாசித்து முடித்த கையோடு இந்த பாடலைக் கேளுங்கள். கவிதையின் மேன்மை உங்களுக்கு புரியும்.






பாடலைக் பார்க்க/கேட்க மேலே கிளிக்கவும்.

Saturday, August 25, 2007

இசை கேட்டு வாழ்வோம்

இசையின் இனிமையில் மயங்காதவர் யாருளர்? இசையில்லாத இவ்வுலகில் யாராவது வாழமுடியுமா? இசை என்பது இசைவிப்பது. விஞ்ஞான ஆராய்ச்சிகள் இசையால் இசைவிக்க முடியாதது எதுவுமில்லை என்கிறது. மனிதரை இசைவிக்க உருவான இசை தாவரங்களை மட்டுமல்ல நோய்களையும் இசைவித்து கட்டுப்படுத்துகிறது. அந்த இசையின் முக்கியத்துவம் என்ன என்பதை சிறிது நோக்குவோம்.


மனித வாழ்வில் இசை என்பது முக்கியமான பங்கை வகிக்கிறது. கருவில் இருக்கும் உயிருக்கு முதலில் வளருவது கேட்டல் புலனே என்றும் பின்னர் வயது முதிர்ந்து இறுதியில் இறக்கும் போது இறுதியாக செயலிழப்பதுவும் அதுவே என்றும் நம்பப்படுகிறது. மானிடவியலாளர்கள் ஆதி மனிதர் பார்க்கும் புலனை விட கேட்கும் புலனையே அதிகம் பயன்படுத்தினார்கள் என்று கூறுகிறார்கள். ஆதி முதல் மொழி கதைக்கப்படாது பாடப்பட்டிருக்கலாம் என்கிறது Charles Darwin-னின் கோட்பாடு. பல நூற்றாண்டுகளாக கவிஞர்களும் தத்துவவியலாளர்களும் இசையின் நோய் நீக்கும் சக்தியைப் போற்றி வந்துள்ளனர். ஒவ்வொரு பண்பாட்டிலும் இசை பிரிக்கமுடியாதபடி இணைந்துள்ளது.


தாலாட்டு என்ற இசையுடனே ஒருவரது வாழ்வு ஆரம்பமாகிறது. பொதுவாக எல்லாப் பண்பாடுகளிலும் தாலாட்டு பாடல்கள் காணப்படுகின்றன. எனவே குழந்தைகள் அனைவரும் பொதுவாக தாலாட்டு இசையுடனேயே உறங்க வைக்கப்படுகிறார்கள். குழந்தைகள் பிறந்தவுடன் முதன்முதல் கேட்பது தாலாட்டு இசையே. எல்லா தாலாட்டுகளும் இனிமையானவை. அவை பெரும்பாலும் நாட்டுப் பாடல் வகையைச் சார்ந்தவை. குழந்தைகளுக்காகத் தாய்மாரால் பாடப்படும் இப் பாடல்கள் குழந்தைகளை அமைதிப்படுத்தித் தூங்கச் செய்யும் ஆற்றல் கொண்டவை. German மொழியில் Johannes Brahms என்பவர் தொட்டில் பாடல் எனப்படும் தாலாட்டை Bertha Faber என்ற இளம் பாடகிக்கு குழந்தை பிறந்த போது அவர் தனது குழந்தைக்குப் படுவதற்காக இயற்றினார். ஆங்கிலத் தாலாட்டுகளும் இந்த முதல் ஜேர்மன் தாலாட்டை ஒத்தவை. ஆங்கிலத்தில் lullaby என்று அழைக்கப்படும் தாலாட்டுகள் மிகவும் இனிமையானவை. அதே நேரம் தாலாட்டுகள் பொதுவாக Mockingbird என்றும் அதாவது ஏளனமான அல்லது போலியான அல்லது நகையாடத்தக்கது என்ற கருத்தும் கொண்டது. இவை குழந்தை அமைதியாகி உறங்குவதற்காக பெற்றோருக்கு நன்கு பரிட்சயமான பல போலியான உறுதி மொழிகளை வழங்குவன.


"Hush little baby, don't say a word Momma's going to buy you a mockingbird"

என்று ஆரம்பமாகி முகம் பார்க்கும் கண்ணாடி, குதிரையும் வண்டியும், வேறும் பல விலையுயர்ந்த பொருள்கள் என பல தருவதாக இந்த ஆங்கிலத் தாலாட்டு உறுதி கூறுகிறது.


ஒரு குழந்தை எதிர் கொள்ளும் முதல் நாட்டுப் பாடல் வகை தாலாட்டாகும். பொதுவாக இதற்கு என்று ஒரு எடுத்துக்காட்டு அமைப்பு அதாவது pattern கிடையாது. தாலாட்டுப் பாடப்படும் சூழலையும் அதனைக் கேட்டும் குழந்தையின் தன்மையையும் கருத்தில் கொண்டு அதற்கு ஒரு முக்கிய நோக்கம் உள்ளது. மரபு ரீதியான கருத்துகளின் படியும் சடங்கு நடைமுறைகளின் படியும் குழந்தை என்பது வளரும் நிலையில் உள்ள முழுமையடையாத ஒன்றாகும். இந்த நம்பிக்கை தாலாட்டிற்கு குழந்தையை அமைதிப்படுத்தி உறங்க வைத்தல், அதன் பாதுகாப்பு, எதிர்காலத்தில் வருவது பற்றிய முன்குறிப்புச் செயற்பாடு அதாவது prognostic function ஆகியவற்றை அளிக்கிறது. இவை ஒவ்வொன்றும் பல்வேறு நோக்கங்களைக் கொண்டுள்ளன. அடிப்படை நோக்கமான குழந்தையை அமைதிப்படுத்தி உறங்க வைத்தல் என்பது தாலாட்டுப் பாடலின் ஓசைச் சிறப்பால் ஏற்படுகிறது.


மரபு ரீதியான நம்பிக்கைகளின் படி குழந்தை பல ஆபத்துக்களுக்கு உட்படக் கூடியது. சிறப்பாக கெட்ட ஆவிகள் குழந்தைக்கு கேடு விளைவிக்கலாம். இது தாலாட்டுக்கு குழந்தையைப் பாதுகாக்கும் ஒரு செயற்பாட்டையும் வழங்குகிறது. தாலட்டின் வார்த்தைகள் இந்த பாதுகாப்பு வேலையைச் செய்வதால் குழந்தையின் ஆரோக்கியத்திற்கு அல்லது பாதுகாப்புக்கு குந்தகம் விளைவிக்கக்கூடிய வார்த்தைகள் அதனின்று தவிர்க்கப்படும். அத்துடன் நேரமும் காலமும் தெளிவாகக் குறிக்கப்படும். பாதுகாப்புக் கருதி சில நிறங்கள் தாலாட்டில் சேர்க்கப்படுவதில்லை. எப்போதும் தாலாட்டுகள் எனது என்ற சொந்தம் பாராட்டும் தன்மை ஒருமைச் சொல்லைப் பயன்படுத்துவன. இது தாலாட்டைப் பாடும் தாய்மாருக்கு ஒரு வித பாதுகாப்பு உணர்வை அளிக்கின்றது. அத்துடன் குழந்தையின் பெயரும் பாலும் அதாவது ஆண் குழந்தை அல்லது பெண் குழந்தை என்பதும் அவற்றில் இடம்பெறும். குழந்தையைச் சுற்றித் தெய்வங்கள் நிற்பதாக தாலாட்டில் இடம் பெறுவதும் அதன் ஒரு செயற்பாட்டைக் குறிக்கிறது. இதனால் குழந்தை எப்போதும் பாதுகாப்பான சூழலில் இருப்பதுடன் இந்த தெய்வ சக்திகள் கெட்ட சக்திகளையும் அகற்றுகின்றன என்று தாலாட்டைப் பாடுபவர்கள் நம்புகின்றனர்.


தமிழ் தாலாட்டுப் பாடல்கள் குழந்தை அணிந்துள்ள பாதுகாப்பு அம்சங்களான ஆடைகள், அரைஞாண், காப்புகள் பற்றி மீண்டும் மீண்டும் குறிப்பிடும். தாலாட்டின் முன்குறிப்பு செயற்பாடு குழந்தை நித்திரையில் வளர்தல், அதன் எதிர்கால வெற்றிகள் பற்றிக் குறிப்பிடுவதை நோக்கமாகக் கொண்டது. மற்றும் குழந்தையை ஆட்டுதல், அதற்கு நீராட்டுதல், உணவூட்டி அரவணைத்தல் பற்றிய விஷயங்கள் குழந்தையின் அங்கங்கள் பற்றிய வளர்ச்சியை மறைமுகமாகச் சுட்டுகின்றன.


தாலாட்டு என்பது நாம் நினைப்பதை விட முக்கியமானது என்பதை அறிஞர்கள் கூறுகிறார்கள். தாய் பாடும் இசையைப் பிறந்தநாள் முதல் கேட்டு வரும் பிள்ளைகள் பின் இசையில் சிறப்புப் பெறவதாக இது பற்றி ஆய்ந்த அறிஞர்கள் கருதுகின்றனர். எனவே தாம் தாலாட்டு என்ற அம்சத்தை விட்டுவிடாது வாழ்வுடன் இணைத்து வைத்திருப்போம்.


தாலாட்டின் பின் பாலர் பாடல்களைக் கேட்டு வளரும் பிள்ளை வளர்ந்த பின் எத்தனையோ இசை வகைகளைக் கேட்கிறது. வாத்திய இசை, சாஸ்திரீய சங்கீதம், நாட்டார் பாடல்கள், பக்திப் பாடல்கள், பொப் பாடல்கள், சினிமாப்பாடல்கள் என்று எத்தனையோ இசை வடிவங்கள் உள்ளன. இசை என்பது பொதுவானது என்றாலும் எல்லோராலும் எல்லா வித இசையையும் ரசிக்க முடிவதில்லை. சாஸ்திரீய இசையை அதன் நுணுக்கங்களை ஓரளவிலேனும் விளங்கிக் கொண்டவர்களால் தான் பூரணமாக ரசிக்க முடியும். சினிமாப் பாடல்கள், பொப்பாடல்கள் என்பன பொதுவாக எல்லோராலும் ரசிக்கப்படுவதற்குக் காரணம் அவற்றின் எளிமையான மனதைக் கவரும் இசையே. ஆங்கிலத்திலும் பிற மொழிகளிலும் இவ்வாறே பல்வேறு இசை வடிங்கள் காணப்படுகின்றன.


இசை வெறும் மேலோட்டமான ரசனைக்கு மட்டுமே உரியதல்ல. அது உள்ளத்தையும் உடலையும் வசப்படுத்துகிறது. உற்சாகமூட்டுகிறது. 1997 ம் ஆண்டில் எலிகளை வைத்து இசைப் பரிசோதனை செய்யப்பட்டது. சாஸ்திரீய இசையை அதாவது classical இசையை மூன்று வாரங்கள் தொடர்ந்து கேட்ட எலிகள் 90 விநாடிகளில் தமது அடைப்பிடத்திலிருந்து தப்பிச் சென்றன. கடும் இசையைக் (heavy Metal) கேட்ட எலிகள் தப்பிச் செல்வதற்கு 30 நிமிடங்கள் எடுத்தன. அவை முந்திய பரிசோதனைகளில் வலியத்தாக்கும் தன்மை பெற்று ஒன்றையொன்று கொன்றதால் இப்பரிசோதனையின் போது அவை தனிமைப்படுத்தப்பட்டன. மனிதரில் செய்யப்பட்ட இசைப் பரிசோதைனைகளும் இதைப் போன்ற முடிவுகளையே தந்தன. ஆயினும் எலிகளைப் போல அவர்கள் கடும் போக்குப் பெறவில்லை.
Washington பல்கலைக்கழகம் 1994 இல் ஒரு வேலைத்தலத்தில் வேலை செய்பவர்களிடையே ஒரு இசைப் பரிசோதனையை நடத்தியது. Classical இசையைக் கேட்ட மக்கள் அதிக அமைதியும் திருப்தியும் அடைந்தவர்களாகக் காணப்பட்டதுடன் அவர்களது உற்பத்திச் சக்தியும் அதிகரித்திருந்தது. இசை கேட்காது வேலை செய்தவர்களை விட அவர்கள் 25.8 வீதம் அதிக செம்மையாக வேலை செய்திருந்தனர்.


இசையால் நோய் குணமாக்குபவர்கள் இன்னும் ஒரு படி மேலே போய் இரத்த அழுத்தம், (blood pressure) இதயத்துடிப்பு (heart rate) சுவாசிப்பு, (breathing) மூளை அலைகள், (brain waves) மற்றும் immune response ஆகியவற்றில் இசை செல்வாக்குச் செலுத்துவதாகக் கூறுகின்றனர். இது தற்போது மருத்துவத்துறை ஆய்வுகளாலும் உறுதி செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு இசையால் நோய் தீர்த்தல் நன்கு ஏற்கப்பட்டுள்ள காரணத்தால் அவுஸ்திரேலியாவில் உள்ள பல வைத்தியசாலைகளில் இத்துறையில் நிபுணத்துவம் பெற்றவர்கள் வேலைக்கு அமர்த்தப்பட்டுள்ளனர். அத்துடன் மூளை வளர்ச்சி குன்றிய பிள்ளைகள் பயிலும் விசேட பாடசாலைகளிலும், வயோதிப நிலையங்களிலும் இசையால் குணமாக்கும் முறை பின்பற்றப்படுகிறது. சிறப்பாக மனநோய் உள்ளவர்களுக்கும், அங்கவீனம் உற்றவர்களுக்கும், வயோதிபருக்கும், மன வளர்ச்சி குன்றியவர்களுக்கும் இம்முறை அதிக பயனளிப்பதாகக் கூறப்படுகிறது. பிரிஸ்பேர்ண் ரோயல் சிறுவர் மருத்துவ மனையில் (Brisbane Royal Children's Hospital) 1993ல் இசையால் குணமாக்கும் துறையை ஆரம்பித்த Jane Edwards இவ்வாறு கூறுகிறார்- இசை நோயாளிகளை அமைதியடையச் செய்வதுடன் அவர்கள் அனுபவிக்கும் வலியிலிருந்து அவர்களது மனதை வேறு திசைக்குத் திருப்புகிறது. அத்துடன் இசை அவர்களது மனங்களை உற்சாகப்படுத்துவதுடன் வைத்தியசாலையில் இருப்பதால் ஏற்படும் மனச் சலிப்பையும் போக்குகிறது. அதனால் அவர்கள் நிம்மதியாக உறங்குகின்றனர். இசையால் குணமாக்குதல் என்பது வைத்தியசாலையில் நோயாளிகள் மத்தியில் போய் பாடுவதல்ல. அவரவருக்கு பிடித்த வகையில் இசையை வழங்குவதே. வாத்திய இசை கேட்க விரும்புபவர்களுக்கு முன்னிலையில் வாத்தியம் வாசிக்கப்படுகிறது. பாட விருப்புபவர்களுடன் சேர்ந்து பாடப்படுகிறது. பாடல் கேட்க விரும்புபவர்களுக்கு அதற்கேற்ப வசதிகள் செய்து கொடுக்கப்படுகின்றன.
மூளைக்கும் காதுக்கும் இடையில் அதிக தொடர்பிருப்பதாகக் கூறப்படுகிறது. கண்களையும் மூளையையும் தொடுக்கும் நரம்புகளை விட காதுகளையும் மூளையையும் தொடுக்கும் நரம்புகள் மூன்று மடங்கு அதிகம் என்கின்றனர் இசையால் நோய் குணமாக்குபவர்கள். நரம்பியல் நோய் வைத்திய நிபுணரான Oliver Sacks பல நரம்பு சம்பந்தமான நோய்களுக்கு இசை மிகவும் பயன்படுவதாகக் கூறுகிறார். பாதிப்புக்குள்ளான மூளை நரம்புகளின் தொழிற்பாட்டை மீளமைக்கும் நுண்ணிய சக்தி இசைக்குள்ளது என்றும், ஞாபக மறதி நோய் (Alzheimer) உள்ளவர்கள் தமக்குத் தெரிந்த பாடல்களைக் கேட்பதன் மூலம் தமது பழைய நினைவுகளை மீட்பதில் பெருமளவு பயன் பெறுவதாகவும் கூறுகிறார்.


பூரண வளர்ச்சி பெறமுன் பிறந்த குழந்தைகளின் பாலை உறுஞ்சும் வேகத்தை இசை 2.5 மடங்கு அதிகரிக்கின்றது. இசையால் அவர்களது எடையும் ஏறுகிறது. கடும் வருத்தங்களால் துன்பப்படும் குழந்தைகளின் இதயத்துடிப்பு இசை கேட்ட ஒரு நிமிடத்தில் சீரடைகிறது என்று கூறப்படுகிறது.


1993ல் கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் செய்யப்பட்ட ஆய்வொன்று Mozart's Piano Sonata K448 என்ற இசையைக் கேட்ட கல்லூரி மாணவர்களின் spatial IQ குறிப்பிடத்தக்க அளவு அதிகரித்ததாக கூறுகிறது. அதே பல்கலைக்கழகத்தில் 1994ல் செய்த ஆய்வில் preschoolers எட்டு மாதங்கள் keyboard படித்த போது அவர்களது spatial IQ 46 வீதம் அதிகரித்தது கண்டுபிடிக்கப்பட்டது.


The Secret Power of Music என்ற தனது நூலில் David Tame என்பவர் classical இசையை இடைவிடாது ஒலிபெருக்கி மூலம் தாவரங்களுக்கு வழங்கிய போது அவை ஒலிபெருக்கியை நோக்கிச் சாய்ந்துடன் இரண்டு மடங்கு வளர்ச்சியையும் பெற்றதாகக் கூறுகிறார். ஆயினும் Led Zeppelin, Jimi Hendrix ஆகிய இசைகளை தாவரங்களுக்கு வழங்கிய போது அவை ஒலிபெருக்கியை விட்டு எதிர்ப்புறமாகச் சாய்ந்ததுடன் விரைவில் பட்டும் போயின என்று மேலும் அவர் கூறுகிறார். இதிலிருந்து தாவரங்களும் எல்லாவித இசைக்கும் இசையாது என்பது தெரிகிறது. மனிதரைப் போல அவைகளும் இசையைத் தெரிவு செய்கின்றன போலும். இந்தியாவிலும் பல வருடங்களின் முன் கர்நாடக சங்கீதத்திற்கு பயிர்கள் வளர்வது கண்டுபிடிக்கப்பட்டமை பற்றி உங்களில் பலர் அறிந்திருப்பீர்கள்.


இசை மூலம் மன அழுத்தத்தைக் குறைப்பதற்கு நான்கு வழிகள் கூறப்படுகிறது.
1. காதைத் துளைக்கும் அலாரத்துடன் நாளைத் தொடங்காது அமைதியான இசையில் ஆரம்பித்தல் வேண்டும்.
2. நடன இசையை கேட்டபடி அங்கங்களை அவை விரும்பிய வகையில் அசைத்தல் வேண்டும். இது மூளையை மீண்டும் சமநிலைப்படுத்துவதற்கு உதவும்.
3. ஹம் பண்ணுதல் சத்தத்திற்கு எதிராக இயங்குமாகையால் சிறிது ஹம் பண்ண வேண்டும். பின்னர் வேகமான இசையுடன் பாடலை விரைவாக முடிக்கவேண்டும்.
4. ஒரு நண்பருடன் இணைந்து இசையுடன் இணையாது அதாவது out of tune இல் மிகப் பலமாகக் கத்திப் பாடவேண்டும்.


பாடுதல் ஆத்மாவுக்கு நல்லது. அநேகமாக எல்லோராலும் பாடமுடியும் என்றும் எமது குரல் நாம் திறப்பதற்காகக் காத்திருக்கின்றது என்றும் கூறப்படுகிறது. பாடல் உடலைத் தட்டி எழுப்புகிறது, பாதிக்கப்பட்ட உணர்ச்சிகளைக் குணப்படுத்துகிறது, மனதைக் குவியச் செய்கிறது. இசையினால் பெரு நன்மைகள் எல்லாம் விளைவதால் இசை கேட்போம், பாடுவோம். ஆரோக்கியமாக வாழ்வோம்.

நன்றி: திண்ணை.காம்

Thursday, August 16, 2007

ஹைக்கூ போட்டி

இங்கே மூன்று கவிதைகளை தருகிறேன். தமிழ் கூறும் நல்லுலகத்தினர் இதில் எது சரியான ஹைக்கூ கவிதை என்பதை பின்னூட்டமிடலாம்.


  1. திண்ணையிலிருந்து
    நிலவை ரசிப்போம்
    தொலைந்தது வீட்டுச்சாவி

  2. மழை வருவதற்குள்
    போய் பார்க்க வேண்டும்
    அவள் போட்ட கோலம்

  3. மறுமுறையும்
    இயேசு வரமாட்டார்
    எல்லார் கையிலும் சிலுவை

Wednesday, August 15, 2007

சுதந்திர தின நல்வாழ்த்துக்கள்


வலைபதிவாளர்கள், நண்பர்கள் அனைவருக்கும் என் இனிய சுதந்திர தின நல்வாழ்த்துக்கள்.

Monday, August 13, 2007

வலைப்பதிவின் வரலாறு

இந்தத் தகவல்களை நான் இணையத்தில் இருந்து எடுத்தேன். இது சரி தானா என்று படிப்பவர்கள் சொல்லலாம்.


* Weblog என்ற பெயர் முதன் முதலில் 17-12-1997 ல் Jorn Barger என்பவரால் உருவாக்கப்பட்டுப் பயன்படுத்தப்பட்டது.



* குறுக்க வடிவமான blog என்ற சொல்லை Peter Merholz என்பவரே முதன் முதலில் பயன்படுத்தினார். 1999 ஏப்ரல் அல்லது மே மாதமளவில் இவரது வலைப்பதிவின் பக்கப்பட்டையில் Weblog என்ற சொல் இரண்டாக உடைக்கப்பட்டு we blog என்றவாறு காண்பிக்கப்பட்டிருந்தது.



* 1994 இலிருந்து தனது தனிப்பட்ட வலைப்பதிவை எழுதிவரும் Justin Hall என்பவர் வலைப்பதிவின் முன்னோடிகளுள் ஒருவராக பொதுவில் கருதப்படுகிறார்.



* 1996 இல் 'Xanga என்ற வலைத்தளம் வலைப்பதிவுச் சேவையை வழங்கத் தொடங்கியது. 1997 அளவில் 100 நாட்குறிப்பேடுகள் அங்கே வைக்கப்பட்டிருந்தன. டிசம்பர் 2005 அளவில் அவற்றின் எண்ணிக்கை 50,000 இனைத் தாண்டிவிட்டது.



* ஏறத்தாழ இதே காலப்பகுதியில் blogger.com என்ற வலைப்பதிவுச் சேவை வழங்குநர்கள் தமது சேவையைத் தொடங்கினர். இச்சேவை பின்னர் 2003 பெப்ரவரியில் google நிறுவனத்தினரால் கொள்வனவு செய்யப்பட்டது.



* ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் மாதம் கடைசி நாள் (31.08) அன்று உலக வலைப்பதிவாளர்கள் நாளாகக் கொண்டாடப்படுகிறது.

Saturday, August 11, 2007

உறவுகள் மேம்பட...

குடும்பத்திலும் சரி, அலுவலகத்திலும் சரி, மனித உறவுகளில் விரிசல்கள் ஏற்படாமல் இருக்கவும், ஏற்பட்ட விரிசல்கள் மேலும் பெரிதாகாமல் இருக்க:

  1. நானே பெரியவன், நானே சிறந்தவன் என்ற அகந்தையை(EGO) விடுங்கள்.
  2. அர்த்தமில்லாமலும் பின்விளைவு அறியாமலும் பேசிக்கொண்டேயிருப்பதை விடுங்கள்(LOOSE TALKS).
  3. எந்த விஷயத்தையும் பிரச்சனையும் நாசுக்காக கையாளுங்கள்(DIPLOMACY), விட்டுக்கொடுங்கள்(COMPROMISE).
  4. சில நேரங்களில் சில சங்கடங்களை சகித்துத்தான் ஆக வேண்டும் என்பதை உணருங்கள்(TOLERENCE).
  5. எல்லோரிடத்திலும் எல்லா விஷயங்களையும், அவர்களுக்கு சம்பந்தம் உண்டோ, இல்லையோ சொல்லிக்கொண்டிருக்காதீர்கள்.
  6. உங்கள் கருத்துகளில் உடும்புப் பிடியாய் இல்லாமல் கொஞ்சம்
    தளர்த்திக்கொள்ளுங்கள்(FLEXIBILITY).
  7. மற்றவர்களுக்குரிய மரியாதையை காட்டவும், இனிய, இதமான சொற்களைப் பயன்படுத்தவும் தவறாதீர்கள்(COURTESY).
  8. புன்முறுவல் காட்டவும், சிற்சில அன்புச் சொற்களை சொல்லவும் கூட நேரமில்லாதது போல நடந்து கொள்ளாதீர்கள்.
  9. பிரச்சனைகள் ஏற்படும் போது அடுத்தவர் முதலில் இறங்கி வர வேண்டும் என்று காத்திருக்காமல் நீங்களே பேச்சைத் துவங்க முன்வாருங்கள்.

Thursday, August 09, 2007

சில கவிதைகள்(சற்று வித்தியாசமாக...)

பாம்பு கடித்தும்
வீம்பாய் இருப்பதால்
மூக்கில் ரத்தக்கரை
நாக்கில் சற்று நுரை.

பிடிவாதக் குழந்தையின்
அழுகையை நிறுத்த
முடிவாக ஒருவழி
....................................
வேண்டாம்.

வள்ளுவர் வீட்டில் இருக்கையில் வாசுகியார்
மெள்ள நடக்கிறார் ஏனென்றால்-உள்ளே
திருக்குறள் பாவெழுதிக் கொண்டிருக்கும் போது
குறுக்கிட்டால் கோபம் வரும்.

ஹைக்கு

சந்திரனில் இறங்குமுன்
சந்தேகம் வந்தது
வீட்டை விட்டு கிளம்புமுன்
பூட்டினேனோ?

அமெரிக்கா அமெரிக்கா

காசு போட்டால்
மிஷினிலிருந்து
வேசி கூட வருகிறாள்.

கென்னடியைச் சுட்டுத் தீர்த்த
சன்னல் வழி எட்டிப் பார்க்க
காசு கேட்கிறார்கள்.

நியூஜெர்ஸி நண்பரின்
'ஏஸி' காரில்
காஸ்ட் போட்டால்
'பாசமலர்' பாட்டு.

இந்த கவிதைகளை எழுதியது யார் என்று கண்டுபிடியுங்கள் பார்ப்போம். சரியாக கண்டுபிடிப்பவர்களுக்கு வாழ்த்து மின்-அஞ்சல் பரிசாக அனுப்பப்படும். உங்களுக்காக ஒரே ஒரு கவிதையை clue-ஆக தருகிறேன்.

ஐன்ஸ்டைன் சொன்னது
அத்தனையும் சத்யமெனில்
இந்தக் கவிதையை
இன்றைக்குத் துவங்கி
நேற்றைக்கு முடிக்கலாம்.

clue-சரியான தமிழ் பதம் என்ன?

Saturday, August 04, 2007

வலைப்பதிவில் என் முதல் youtube video

ச்சும்ம்மா ஒரு sample test...