Thursday, January 24, 2008

என் முதல் டிஜிட்டல் கேமிரா

நான் வெகு நாளாக டிஜிட்டல் கேமிரா(தமிழில் என்னப்பா!!!) வாங்க வேண்டும் என்ற எண்ணம் சமீபத்தில் நிறைவேறியது. போன வாரம் நான் வாங்கியது Sony DSC-H3 மாடல்.

இப்போது தான் டிஜிட்டல் புகைப்படம் எடுப்பது எப்படி என்று படிக்க ஆரம்பித்திருக்கிறேன். வலைப்பூ ஒன்றில் தமிழில் புகைப்படக்கலை பற்றிய தகவல்களை கொடுத்திருக்கிறார்கள். படிக்க மிகவும் அருமையாகவும் எளிமையாகவும் உள்ளது. இந்த தளங்களில் தான் நான் பல தகவல்களை நான் படித்துத் தெரிந்து கொண்டேன்.


மேலும் வலை உலக அன்பர்கள் எனக்கு டிஜிட்டல் புகைப்படம் பற்றிய தகவல்களை கொண்ட வலைத்தளங்களை பின்னூட்டங்களில் தெரிவித்தால் நன்றாக இருக்கும்.


இனி நான் எடுத்த/எடுக்கப்போகிற படங்கள் சிலவற்றை பதிவில் போடலாம் என்று எண்ணியிருக்கிறேன். புகைப்படக்கலையில் ஆர்வம் உள்ள அன்பர்கள் என்னுடைய படங்களை அலசி ஆராய்ந்து குற்றம் குறைகளை பின்னூட்டங்களில் தெரிவிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.

Wednesday, January 09, 2008

சுடுதேங்காய்

தேவையான பொருட்கள்

1. குடுமியுடன் ஒரு நல்ல தேங்காய்
2. பொட்டுக்கடலை - ஒரு பிடி
3. வெல்லம் - ஒரு பிடி
4. கற்கண்டு - அரை பிடி
5. அவல் - ஒரு பிடி
6. முந்திரி பருப்பு - அரை பிடி
7. டம்ளர் -1, ஸ்பூன் - 1
8. தீப்பெட்டி, காய்ந்த குச்சிகள், இலை, மரத்தடி, நண்பர்கள் (optional)

செய்முறை:

முதலில் தேங்காயின் குடுமியை பிடுங்க வேண்டும். இது ரொம்ப ஈஸி. முக்கோண வடிவத்தில் மூன்று கண்கள் தெரியும். அதில் ஒரு கண்ணை ஸ்பூனின் பின் பக்கத்தால் நன்றாக நோண்டி துளை போடுங்கள். பின்பு அதன் வழியாக இளநீரை டம்ளரில் சேகரித்து வையுங்கள். மேற்சொன்ன தேவையான பொருட்கள் (கடைசி இரண்டை தவிர) எல்லாவற்றையும் கொஞ்சம் கொஞ்சமாக துளை வழியே உள்ளே தள்ளுங்கள். டம்ளரில் சேகரித்த இளநீரையும் அதனுடன் சேருங்கள். இப்போது முன்பு பிய்த்த தேங்காயின் குடுமியை திருப்பி அதன் துளையை நன்றாக அடையுங்கள்.

மரத்தடியில் கொஞ்சம் காய்ந்த இலை, குச்சிகள் போன்றவற்றை பற்ற வைத்து அதில் தேங்காயை தலைகீழாக போடவும். சிறிது நேரத்தில் அருமையான வாசனை வரும். பொறுங்கள். தேங்காயின் மேல் ஓடு கறுப்பான உடன் நெருப்பில் இருந்து எடுத்து விடலாம். சூடு தணிந்த பின் உடைத்து சாப்பிட வேண்டியது தான். அதன் சுவையை வர்ணிக்க முடியாது.

குறிப்பு: காஸ் அடுப்பு,மைக்ரோ வேவ் போன்றவற்றில் இதை சமைக்க முடியாது.

நன்றி: தேசிகன்

I am Back

பதிவு போட்டு வெகுநாட்கள் ஆனதால், அனைத்து நண்பர்களும் என்னுடைய பதிவு என்ன ஆயிற்று என்று கேட்காததால், நானே ஒரு பொருத்தமான காரணத்தை தேடி கண்டுபிடித்து விட்டேன்.

நான் தற்போது புது இடத்திற்கு குடிபெயர்ந்து விட்டதால், அங்கே இணைய இணைப்பை உடனடியாக பெற முடியவில்லை. தற்போது டாடா இண்டிகாம் நான் இணைப்பு இல்லாமல் கஷ்டப்படுவதை பார்த்து விட்டு wireless connection(தமிழில் 'கம்பியில்லா' என்று சொல்லாமா?) கொடுக்கப்போகிறார்கள்.

இதனால் நான் மீண்டும் என்னுடைய வலைப்பூவில் பதிவை தொடங்கி விட்டேன்.