Saturday, May 03, 2008

சுஜாதா-கேள்வி பதில்

சுஜாதாவிற்கு பதிலா? ஜே.எஸ்.ராகவன் (புரோக்ராம் செய்த ஒரு ரோபோவாக சுவையான விஷயங்களை பூலோகத்தில் எழுதிக் குவித்த வித்தகர் சுஜாதா வைகுண்ட டைம்ஸில் இவ்வாறு பதிலளிப்பாரா? )

கே: விஞ்ஞானத்தின் உதவியுடன் மானிடர்களைப் பதினாறைத் தாண்டாத மார்க்கண்டேயர்களாக மாற்ற முடிந்துவிட்டால் என்னுடயை நிலை என்னாவது? (யமதர்மராஜன், யமலோகம்)

ப: காலன் கலங்க வேண்டாம். படை எடுப்பு, பயங்கர வாதம், வாகனப் புகைகள், பஸ் எரிப்பு, ஓஸோன் ஓட்டை, கலப்படம் போன்றவை உங்களுடைய பாசக் கயிற்றுக்கு வேலை வைக்கும்.

கே: மிஸ் யூனிவர்ஸ் போட்டியில் கலந்துகொண்டு வெற்றி அடைய ஒரு சிறப்புப் பயிற்சி தேவையாமே? அது என்ன? (மேனகா, இந்திர லோகம்)

ப: வெற்றி பெற்றவுடன் இரண்டு கைகளால் கன்னங்களை எல்.ஐ.சி எம்பிள மாகத் தாங்கி ஊஊஊஊன்னு ஒரு பாட்டம் அழணும். அப்படி அழுது பஞ்ச் வைக்கா விட்டால் சூட்டின கிரீடத்தை வெடுக்கென்று பிடுங்கிக் கொண்டு போனாலும் போய் விடுவார்கள்!

கே: கையில் சாப்ட்வேர் எதற்கு? சுவடிகள் இருந்தால் போறும் இல்லையா? (சரஸ்வதி, பிரும்ம லோகம்)

ப: Lotusல் உட்கார்ந்து கொண்டுசாப்ட்வேரைப் புறக்கணித்தால் எப்படி?

கே: நாராயணனைத் தூணிலே கண்டவன் நான். ஆனால் துருவன் ரேஞ்சில் பிரபலமாகவில்லையே ஏன்? (மாஸ்டர் பிரகலாதன், வைகுண்டம்

ப: சிம்பிள். துருவனுடைய மேட்டர் பூலோக சினிமாக் களில் நன்றாக ஊறினஅம்மா-அப்பா-சித்தி-சென்டி மென்ட். அதனால் தான் அவன் வடக்கே நிரந்தர 'ஸ்டார்' ஆகிட்டான்.

கே: விமானத்திலே சீதையைக் கடத்திண்டு போனதை எதிர்த்து சண்டை போட்ட என்னை ராவணன் சிதைத்தது நியாயமா? ( ஜடாயு, ஆகாசம்)

ப: ஏரோடிரம்மில் வேலையாயிருந்தவன் நான். ஆனாலும் இதை விமானங்கள் எதிர்கொள்ளும் bird hit ஆகக் கருதாமல் ஒரு அரக்கச் செயலாகவே நினைக் கிறேன்.

கே: என்னுடைய ஐயனைப் போல பூலோகத்தில் இருப்பவர்களுக்கு மூன்றாவது கண் இருந்தால் என்ன ஆகும்? நந்திகேஸ்வரன், கைலாயம்)

ப: (1) எல்லோர் கைகளிலேயும் ஒரு தீயணைப்புக் கருவி தயாராக இருக்கும். (2) மூன்று கண்ணாடிகள் பொருத்திய ஆயுத (எழுத்து)க் கண்ணாடி அணிய வேண்டி வரும். (3) விபூதிச் செலவாணி குறையும்.

கே: தலை கீழாக நின்று முயன்றாலும் என்னால் நேராக நிற்க முடியவில்லையே என்ன செய்ய?(திரிசங்கு ராஜா, அந்தரம்)

ப: அது உங்களுடைய 'மித்திரர்' செய்த வேலை! நான் என்ன செய்ய?

கே: காதலர்கள் தினம் என்று சொல்கிறார்களே அப்படி என்றால் என்ன? (ரதி-மன்மதன், சொர்க்கபுரி)

ப: தினம் காதலர்களாக இருக்கும் உங்களுக்குக் காதலர் தினம் எதற்கு?

கே: குக்கூ, குக்கூ என்று சப்தமிடும் புறாக்கள் பக்கம்தான் என்னுடைய தராசு சாயும். உங்கள் தராசு?(சிபிச் சக்கரவர்த்தி, வைகுண்டம்)

ப: ஹைக்கூ பக்கம்!

கே: புள்ளின் வாய் கீண்டானை.....என்ற இடத்தில் நிறுத்தி விட்டு...பொல்லா அரக்கனை என்று பாடி நிறுத்தி விட்டு........கிள்ளிக் களைந்தானை.......என்று பாடுகிறார்களே? கண்ணன் பொல்லா அரக்கனா? இது கொடுமையில்லையா? (ஆண்டாள் நாச்சியார் , வைகுண்டம்)

ப: ஓங்கியுலகளந்த உத்தமன் bare body.......... என்றும் ஒருத்தர் பாடுகிறாராமே அந்தக் கொடுமையை விடவா?

நன்றி: ஜே.எஸ்.ராகவன், jsraghavan@gmail.com

No comments: