Wednesday, July 11, 2007

படித்ததில் பிடித்தது

இந்த வருடம் சென்னையில் நடந்த புத்தக (திரு)விழாவிற்கு சென்றிருந்தேன். நான் வாங்கிய புத்தகங்களில் சற்று வித்தியாசமானது எழுத்தாளர் கி.ராஜநாராயணன் மற்றும் கழனியூரன் தொகுத்த "மறைவாய் சொன்ன கதைகள்".
இந்தத் தொகுப்பில் 100 நாட்டுபுறக் கதைகள் இடம் பெற்றுள்ளன.
இதுவரை பெரும்பாலும் செவி வழியாகவே அறியப்பட்டு வந்த நாட்டுப்புறப் பாலியல் கதைகள் எழுத்து வடிவம் பெற்றிருக்கின்றன. பாலியல் தெளிவு எற்படுத்தும் கதைகள், நகைச்சுவைக்காவே புனையப்பட்ட கதைகள், மருவிய கதைகள், உண்மைச்சம்பவங்கள் எனப் பல பரிமாணங்களில் இக்கதைகள் எழுதப்பட்டுள்ளன.
தமிழில் நாட்டார் பாலியல் கதைகள் இவ்வளவு விரிவான தொகுதியாக வெளிவருவது இதுவே முதன்முறை. பாலியல் குறித்த வேடிக்கைகளும் வினோதங்களும் நிரம்பிய இக்கதைகள் காலம்காலமாக சொல்லப்பட்டும், கேட்கப்பட்டும் வருபவை.
மெய்யாகவே சிலர் பாலியல் கதைகள் என்பது அசிங்கம் என்று கருதுகிறார்கள். ஆனால் இந்த நூறு கதைகளை தெரிந்து கொண்டாலே போதும், ஓரளவு பாலியல் ஞானத்துக்கு.
இப்புத்தகத்தில் இடம்பெற்றிருக்கும் பெரும்பாலான கதைகள் தாத்தா என்கிற 'தாத்தா நாயக்கர்' என்ற கதைசொல்லி சொல்வதாகவே அமைந்திருக்கின்றன. அவர் மூலமாக பல பொதுவான கருத்துக்களையும் முன்வைக்கிறார் ஆசிரியர். 'கெட்ட வார்த்த கத கேக்கிறவன் கெட்டு பொயிடுவான்னு ஒன்னும் கிடையாது. விஷயம் தெரிஞ்சவன் அவ்வளவு சீக்கிரம் கெட்டுப் பொயிட மாட்டான்' என்பது தாத்தாவின் வாதமாக இருக்கிறது.
இதில் சில கதைகளை நான் எனது நண்பர்கள் வட்டாரத்தில் கேட்டதுண்டு. ஆனால் இப்போதும் எழுத்தாளர் தமிழ் மணம் மாறாமல் மண்வாசனையுடன் கதைகளைச் சொல்லும் போது படிக்க மேலும் ஆர்வத்தைத் தூண்டுகிறது.
இப்புத்தகத்தை உயிர்மை பதிப்பகத்தார் வெளியிட்டுயிருக்கிறார்கள். இதன் விலை Rs. 230/- மட்டுமே.

No comments: