Wednesday, January 09, 2008

சுடுதேங்காய்

தேவையான பொருட்கள்

1. குடுமியுடன் ஒரு நல்ல தேங்காய்
2. பொட்டுக்கடலை - ஒரு பிடி
3. வெல்லம் - ஒரு பிடி
4. கற்கண்டு - அரை பிடி
5. அவல் - ஒரு பிடி
6. முந்திரி பருப்பு - அரை பிடி
7. டம்ளர் -1, ஸ்பூன் - 1
8. தீப்பெட்டி, காய்ந்த குச்சிகள், இலை, மரத்தடி, நண்பர்கள் (optional)

செய்முறை:

முதலில் தேங்காயின் குடுமியை பிடுங்க வேண்டும். இது ரொம்ப ஈஸி. முக்கோண வடிவத்தில் மூன்று கண்கள் தெரியும். அதில் ஒரு கண்ணை ஸ்பூனின் பின் பக்கத்தால் நன்றாக நோண்டி துளை போடுங்கள். பின்பு அதன் வழியாக இளநீரை டம்ளரில் சேகரித்து வையுங்கள். மேற்சொன்ன தேவையான பொருட்கள் (கடைசி இரண்டை தவிர) எல்லாவற்றையும் கொஞ்சம் கொஞ்சமாக துளை வழியே உள்ளே தள்ளுங்கள். டம்ளரில் சேகரித்த இளநீரையும் அதனுடன் சேருங்கள். இப்போது முன்பு பிய்த்த தேங்காயின் குடுமியை திருப்பி அதன் துளையை நன்றாக அடையுங்கள்.

மரத்தடியில் கொஞ்சம் காய்ந்த இலை, குச்சிகள் போன்றவற்றை பற்ற வைத்து அதில் தேங்காயை தலைகீழாக போடவும். சிறிது நேரத்தில் அருமையான வாசனை வரும். பொறுங்கள். தேங்காயின் மேல் ஓடு கறுப்பான உடன் நெருப்பில் இருந்து எடுத்து விடலாம். சூடு தணிந்த பின் உடைத்து சாப்பிட வேண்டியது தான். அதன் சுவையை வர்ணிக்க முடியாது.

குறிப்பு: காஸ் அடுப்பு,மைக்ரோ வேவ் போன்றவற்றில் இதை சமைக்க முடியாது.

நன்றி: தேசிகன்

No comments: